16.05.2019 / 10.09.1440
முஸ்லிம்களுக்கெதிராக புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
தாக்குதல் இடம் பெற்ற பகுதிகளில் பாதிப்புக்கள் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank
IBU - Branch
Swift Code – CCEYLKLX
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank
Main Branch
Swift Code - AMNALKLX
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர், பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
15.05.2019
அவசர வேண்டுகோள்!
கடந்த 13.05.2019 அன்று குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வருமாறு தனி மனிதர்களிடமும், அமைப்புக்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.
குழந்தைகளின் தேவைகளையும், ரமழான் கால தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தார்மிகக் கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக.
ஆமீன்.
அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
14.05.2019 (08.09.1440)
முஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்
நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளும் தொடர்ந்து கலந்தாலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் தொடரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு இணைப்புக் குழுவின் நெறிப்படுத்தலில் நாட்டின் உயர் மட்ட தலைமைகளான ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோருடன் உடனடியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 21.04.2019ஆம் திகதி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஒருமித்த குரலில் வன்மையாக கண்டித்து நிராகரித்ததையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாம் இவ்வாறான மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் நிலையில், வழி தவறிய சிலரின் இந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒருபோதும் பொறுப்புக் கூற முடியாது. எனவே, இதனை மையமாக வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக பார்ப்பதும் முஸ்லிம்களுடன் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களது உடைமைகளையும் தாக்குவதும் பிழையான செயற்பாடுகளாகும்.
தவிரவும், இந்நெருக்கடியான சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக் கொள்கின்றது:
1. எவ்வகையான அசாதாரண சூழ்நிலைகள் உருவாகியபோதிலும் முஸ்லிம்கள் வழமை போன்று அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ளும் அதேநேரம் தொழுகை, நோன்பு, தவக்குல், துஆ, இஸ்திஃபார் முதலான இபாதத்களை கடைபிடித்தொழுக வேண்டும்.
2. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து விழிப்புடனும் தூரநோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.
3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இது விடயமாக நாம் அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், முஸ்லிம்கள் அனைவரும் சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
4. அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதனால் அது தொடர்பான சட்ட வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.
5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அதேநேரம், அவற்றை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
6. எந்த அசாதாரண சூழ்நிலையிலும் அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
7. நாட்டில் தொடரும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு ஐவேளை தொழுகையில் குனூத் அந்நாஸிலாவை தொடர்ந்தும் ஓதிவரும் அதேநேரம், அதில் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட துஆக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
8. இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்து கடந்த காலங்களில் நடந்து கொண்டதைப் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
9. தத்தமது பிரதேசங்களிலுள்ள சமய, சமூக தலைமைகளோடு கலந்துரையாடி பிரதேசத்தில் சுமுகமான நிலை உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்.
அல்லாஹ்வே எமக்கு போதுமானவன்; அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்!
வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
21.03.2019 (13.07.1440)
நாடு வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தேன்றியுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.
அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.
தண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்” என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள்
“1169 اللَّهُمَّ اسْقِنا غَيثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعاً غَيْرَ ضارٍ، عَاجِلاً غَيْرَ آجِلٍ “رواه أبو داود
“897اللَّهُمَّ أغِثْنَا ، اللَّهُمَّ أغِثْنا ، اللهٌمَّ أغِثْنا - “رواه مسلم
“1176 اللهٌمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ وَأحْيِ بَلَدَكَ المَيِّت - "رواه أبو داود
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2017.10.13 / 1439.01.22
ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக் கொள்ள வில்லை
நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் 'வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வருகின்றுது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.
மேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைவருக்கும் அறியத்தர விரும்புகின்றது.
இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றிய தெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவே ஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத் தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன.
ஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில் உலமாக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம் வேண்டிக்கொண்டனர். இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிரிதொரு சட்டத்தரணியையும் ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷைக் பாழில் பாரூக் அனுப்பப்பட்டார்.
அடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்-ஷைக் பாழில் பாரூக் அவர்;கள் குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றி அங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம் காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில் வழங்கும் வகையியே சந்திப்பு நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தினார்.
இவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரது தப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன் உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.
எனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி ஐந்து கடிகங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரோஹின்யா முஸ்லீம்களுக்கு நீதியையும் இநிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஐக்கிய நாடுகள் சபை,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம். (OHCHR),இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கும் ரோஹின்யா மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து அவற்றை உடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு துருக்கி நாட்டின் ஜனாதிபதி தய்யிப் உர்துகானின் ரோஹின்யா முஸ்லீம்கள் மீதான சிறந்த முன்னெடுப்பினை பாராட்டியும் அதனை தொடர்ந்து முன் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் கடிதமொன்றினை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இது தொடர்பில் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்; மியன்மார் அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெறும் ரோஹின்யா மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பினை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டி கடிதம் மூலம் ஜம்இய்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
30.08.2017 (07.12.1438)
இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்
பொதுவாக துல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப 10 நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'(துல்-ஹிஜ்ஜஹ், ஆரம்ப) பத்து நாட்களில் செய்யும் நல்ல அமல்கள் ஏனைய நாட்களில் செய்யப்படும் நல்ல அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு பிடித்து வந்துள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும் இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள்.
ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
சிலர் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதேதினத்தில் அனைத்து நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.
உண்மையில் இக்கருத்து பொருத்தமற்றதாகும். ஏனெனில் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9 ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9 ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
புவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வித்தியாசப்படுவதால் நாட்களின் ஆரம்பம் வித்தியாசப்படுவது யாவரும் அறிந்ததே. அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வித்தியாசப்படும். எனவே மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.
மக்காவில் பிறை தென்பட்டதன் பின்னர் வேறு நாடுகளில் பிறை தென்பட்டால் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினத்தில், அவர்களது 8 ஆம் பிறையில் அவர்கள் நோன்பு நோற்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் மக்காவுக்கு முன்னர் பிறை தென்பட்ட நாடுகளில் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினமானது அவர்களுடைய 10 ஆம் நாளான பெருநாள் தினமாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்கு நோன்பு நோற்பது ஹராமானதாகும்.
பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பிக்கப்படுவதில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன:
1. முழு உலகத்திலும் ஒரே பிறை
2. பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாடு
மக்காவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.
இதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக இருக்கின்றன:
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02-185) என்று கூறுகிறான். இதன் பொருள் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கபடாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.
இன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில் குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது மதீனாவில் இருந்த இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
எனவே, இவற்றின் அடிப்படையில் பிறை பிறக்கும் பிராந்தியத்திற்கேற்ப அறபாவுடைய தினம் வித்தியாசப்படும் என்பதால் இலங்கை நாட்டுடைய துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.
அறபாவுடைய நோன்பு விடயத்தில் இக்கருத்தையே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கொண்டுள்ளனர். மேலதிக தகவலுக்காக பின்வரும் பத்வாக்களை வாசிப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹ்மதுல்லாஹி அலைஹி : (https://islamqa.info/ar/40720)
தாருல் இப்தா – தாருல் உலூம் தேவ்பந்த் : (http://www.darulifta-deoband.com/home/en/Jumuah--Eid-Prayers/57059)
றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமி : (https://goo.gl/zmAk2j)
அத்துடன் உள்நாட்டில் பிறை பார்த்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவால் ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை தீர்மானிக்கப்படுகின்றது. பிறையை தீர்மானிப்பதில் அரசாங்கத்தினதோ அல்லது ஏனைய சக்திகளினதோ எவ்வித செல்வாக்கும் ஒருபோதும் காணப்படுவதில்லை. அத்துடன் தமது சொந்தத் தேவைகளுக்காக வதந்திகளை பரப்புபவர்களின் விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜம்இய்யாவின் பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் கே. எம். முக்ஸித் அஹ்மத்
செயலாளர் - பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
11.07.2017 (16.10.1438)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி
அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.
கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.
தனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
23.07.2015
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்து கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.
IS (ISIS) ஒரு கடுமையான, தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேற்குலக ஊடகங்கள் “ஜிஹாத்” என்ற சொல்லுக்கு கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றன. எந்தவொரு அமைப்பும் “ஜிஹாத்” என்ற சொல்லை அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்காக பயன்படுத்துமேயானால் அது இஸ்லாத்திற்கும் அதன் போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே கணிக்கப்படும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” எனும் வெளியீடுகளில் “ஜிஹாத்” பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் IS (ISIS) அமைப்பைக் கண்டித்து 06.07.2014 ஆம் திகதி SLBC யில் ஒலிபரப்பப்பட்ட உரையும் 30.08.2014ல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும். பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், நாடுகளும் IS (ISIS)) என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.
IS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.
எவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
மேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும், சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்; ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.