13.12.2020

 

தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே சுகாதார வழிமுறைகளை தாங்கள் அனைவரும் பின்பற்றி நடந்தீர்கள். அதற்காக எமது நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும். மேலும் இச்சந்தர்ப்பத்திலும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும், சுகாதார அதிகரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறும் முஸ்லிம் சமூகத்தினரிடம் மிக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.


குறிப்பாக பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் எந்தெந்த பகுதிகளில் இடம்பெறுகின்றதோ, அந்த நேரத்தில் அந்த பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறும், அதன் மூலம் கொவிட்-19 என்ற இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து தன்னையும் பிறரையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்திகொள்ளுமாறும் அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/02-273

 

2020.12.10

1442.04.23

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹமத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.


பொதுவாக சோதனைகள் ஏற்படுவதன் நோக்கம் குறித்து அருள் மறை அல் குர்ஆன் கூறுகையில் அடியார்கள் அல்லாஹூ தஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே நோக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் இச்சோதனைகள் நீங்குவதற்காக பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திப்பதோடு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் தனது தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வார்கள். மேலும், அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூதுன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் ஸஹிஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூதுன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இவ்வடிப்படையில் பொதுப்படையான சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களை நீக்கி அல்லாஹூ தஆலாவின் உதவிகளை பெற்றுத்தருவதில் “குனூதுன்னாஸிலா” பிரார்த்தனை பெரும் சக்தியுள்ளதாக அமைந்துள்ளது.


எனவே, கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமலாகி நாட்டில் சுபீட்சம் ஏற்படவும் கொரோனாவினால் மரணித்த ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு சாதகமான நிலை உருவாகுதற்காகவும் மறுஅறிவித்தல் வரைக்கும் மஸ்ஜித்கள், வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் தொழும் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளில் உணர்வுபூர்வமாகவும் உட்சாகமாகவும் குனூதுன்னாஸிலாவை இக்லாஸூடனும், நம்பிக்கையுடனும் ஓதிவருமாறு கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூதுன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


 (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (سنن أبي داود
 (اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ (صحيح البخاري
 (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ (صحيح مسلم
 (رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى لِي ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ (سنن الترمذي


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர்
பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


09.11.2020 (22.03.1442)

 

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.


அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:


1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்பினருக்கு உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அமுல் படுத்த வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.


3. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.


4. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.


5. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை விடப்பட்டது.


6. 22.06.2020 ஜனஸா அடக்கம், தகனம் தொடர்பிலான மார்க்கத் தெளிவு கொடுக்கப்பட்டது.


7. 05.07.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை நாம் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.


ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள், பாராளுமன்றம் செல்ல முன்பிருந்தே இதற்கான பூரண முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதைப் போன்று இன்றும் அமைச்சரவையில் பிரதான இடம் வகிக்கும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து ஈடுபாடு காண்பித்து வருகிறார் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.


சுகாதார துறைசார்ந்தோர்கள் சிலரின் அச்சம் அல்லது சந்தேகமே அடக்கம் செய்யும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள தடையாக இருந்து வருகின்றது என்பதையும் இந்நிலைப்பாடு தொடர்பில் தனக்கு அதிருப்தி இருக்கின்றது என்பதையும் 2020.11.08 ஆந் திகதி கொழும்பு கொல்லுபிட்டி ஜும்ஆப்பள்ளியில் நடைபெற்ற விஸேட வைபவத்தின் போது, மிகத் தெளிவாக கருத்து தெரிவித்தார் என்பது யாவரும் அறிந்ததே.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வழிகாட்டலுக்கமைய மையவாடிகள், மண்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதனால், இன்று (2020.11.09) குப்பியாவத்த மையவாடியில் மண்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; அது தொடர்பான அறிக்கையை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

ACJU/FRL/2020/21-238
2020.11.05

1442.03.17

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19


இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.


நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 


2020.11.05 (1442.03.17)


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.


இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)


2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)


3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)


4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )

 

5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.

 

6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)


அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:

"‏ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏"‏


(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)

 

7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

ACJU/NGS/09-17/002

21.09.2017/ 29.12.1438

சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்

புனித இஸ்லாம் இன, மத பேதமின்றி அனைத்து உயிர்களையும் சமமாக  மதிக்கின்றது. எந்தவோர் உயிரும் அநியாயமாகக் கொலை செய்யப்பட அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரை அநியாயமாகக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்த குற்றத்துக்கு சமம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ரோஹிங்ய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அநியாயமாக அவர்கள் கொன்றுகுவிக் கப்படுவதை முழு உலகமும் கண்டிக்கின்றது. நமது நாட்டு மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தமது கண்டனங்களைத் வெளியிட்டு வருகின்றனர்.

அல்லாஹுதஆலாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட  முஸ்லிம்களாகிய நாம் சோதனைகள், கஷ்டங்கள் வருகின்றபோது நமது பாவங்களிலிருந்து தௌபா செய்து மீளுதல், அவன் பக்கம் நெருங்குதல், அதிகதிகம் துஆ செய்தல் ஆகிய ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுவதுடன் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதிலும் அவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தங்களை உருவாக்குவதிலும் முன்னிற்க வேண்டும். இதுவல்லாமல் பெரும்பான்மையாக பௌத்த மக்கள் வாழ்ந்து வரும் நமது நாட்டில் அவர்களது பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் வண்ணம் செயற்படுவது ஆரோக்கியமாகாது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடயமாக ஆரம்ப கட்டத்திலேயே அந்நாட்டுத் தூதுவராலயம், ஐ.நா சபை இலங்கை ஜனாதிபதி முதலிய சகல தரப்பினருக்கும் கண்டனக் கடிதங்களை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜம்இய்யா வேண்டிக் கொண்டது.

ஏதாவதொரு விடயத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஷரீஆவின் வழிகாட்டலையும் ஜம்இய்யா வெளியிட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

எனவே குறித்த பிரச்சினையில் மிகவும் நிதானமாகவும், நாட்டு நிலமைகளைக் கவனத்திற் கொண்டும் நடந்து கொள்ளுமாறு தனது மாவட்ட பிரதேசக் கிளைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/826-2016-08-08-07-48-04

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு 

கடந்த 20.11.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டின் தற்பொழுதுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய சந்திப்பில் பல அமைப்புக்கள் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதன் முதற்கட்டமாக 21.11.2016 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தீர்மானத்துக்கமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் (21.11.2016) இரவு 08:00 மணியவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஆரம்பித்துவைத்தர்கள். அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ எம். றிஸ்வி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தினார்கள்.

தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலையை சீராக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனைத்து முஸ்லிம்களும் பாவங்களிலிருந்து தௌபா செய்து அல்லாஹுதஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் தற்போது எழுந்துள்ள ISIS சர்ச்சை தொடர்பான விடயங்களை அணுகும் முறை பற்றியும் இனவாதத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் முன்னெடுத்துச் செல்லப்படாமல் தேங்கி நிற்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் 22.11.2016 ஆம் திகதி (இன்று) மேற்குறிப்பிட்ட விடயங்களை அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக அமைச்சரவை உறுப்பினர்கள் உறுதியளித்தனர். அத்துடன் 23.11.2016 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் உண்மையான நிலை பற்றியும் ஏலவே முஸ்லிம் அமைப்புகள் 23.07.2015 வெளியிட்ட ISIS க்கு எதிரான பிரகடனம் பற்றியும் தெளிவுபடுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை தணிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்திலும் ISIS தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முனைப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தனர்.