ACJU/NGS/2023/011
2023.01.15 (1444.06.21)


தென்னிந்தியா, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அஷ்-ஷைக் எம்.ஏ.எம். பரகத்துல்லாஹ் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஷைகுல் ஃபலாஹ் என்றழைக்கப்பட்ட அஷ்ஷைக் அப்துல்லாஹ் ஹஸ்ரத் (றஹ்) அவர்களின் இளைய மகனான அன்னார் 2023.01.14 ஆம் திகதி வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் சிறுபிராயம் முதல் தனது தந்தை ஷைகுல் ஃபலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் (றஹ்) அவர்களுடன் காத்தான்குடியில் வளர்ந்தார்கள். 1990ம் ஆண்டு கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அமைந்திருக்கும் 'மதீனத்துல் இல்ம்' அரபுக் கலாசாலையில் இணைந்து அல்குர்ஆனை மனனமிட்டு 'அல்ஹாபிழ்' பட்டத்தை பெற்றதுடன், மார்க்கக் கல்வியை காத்தான்குடி, ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபுக் கல்லூரியில் கற்று 'அல்ஆலிம்' பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள்.


மென்மைக் குணமுள்ளவர்களாகவும், நற்பண்புள்ளவர்களாகவும், எப்போதும் சிரித்த முகத்துடனும், வணக்க வழிபாடுகளில் பக்குவமாகவும் பேணுதலாகவும் வாழ்ந்த அன்னார் தனது தந்தை ஷைகுல் ஃபலாஹ் மற்றும் மூத்த சகோதரரான அஷ்ஷைக் றஹ்மத்துல்லாஹ் (ஃபலாஹி) ஆகியோருடன் இணைந்து இலங்கைத் திருநாட்டில் பல உலமாக்கள் மற்றும் பல ஹாபிள்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்துள்ளார்கள். இதற்காக தன்னுடைய குடும்பம், பிள்ளைகள், உறவுகளை விட்டு பல வருடங்களாக இலங்கை மண்ணில் பல சேவைகளை செய்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله


(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா