19.06.2019
மக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது
இலங்கை வாழ் முஸ்லிம் சிறார்களின் நல்லொழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் வழிவகுக்கக் கூடிய மக்தப் கல்வியை பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் துணை போகக் கூடியதாக சித்தரித்து பொதுபல சேன அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. உண்மைக்குப் புறம்பான இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் விடயத்தில் கவனமாக இருக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சிறார்களின் நல்லொழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் வழிவகுக்கக் கூடிய, அவர்களை நாட்டின் நற்பிரஜைகளாக வாழச் செய்யக் கூடிய கல்வி மஸ்ஜித்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட மஸ்ஜித் கல்விக் கூடங்களுக்கான பாடத்திட்ட முறையை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்த 2010ஆண்டு அறிமுகம் செய்தது. குறித்த பாடத்திட்டத்தைத் தழுவிய பாட நூற்களை அமைத்து அதற்குத் தேவையான ஒழுங்குவிதிகளையும் அறிமுகம் செய்து அந்தப் பள்ளிக் கூடங்களை மக்தப் எனும் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புனரமைப்புச் செய்தது. அதனை ஒவ்வொரு மஸ்ஜிதும் தமது மேற்பார்வையின் கீழ் நடாத்தும் வண்ணம் ஜம்இய்யா வழிகாட்டி வருகின்றது.
மக்தப் என்பது எழுதும் இடம், படிக்கும் இடம் எனும் கருத்துக்களைக் கொடுக்கும் அரபுச் சொல்லாகும். குறித்த செயற்பாடுகள் அங்கு நடைபெறுவதால் அச்சொல் வழங்கப்படுகிறது.
மக்தப் மாணவர்களிடமிருந்து பெறப்படும் மாதாந்தக் கட்டணங்கள் ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைளுக்கே உபயோகிக்கப்படுகின்றன. அதனை அவ்வந்த மஸ்ஜித்களின் மக்தபுக்கான பிரதிநிதிகள் பொறுப்பேற்றுச் செய்கின்றனர். அது வல்லாமல் ஜம்இய்யாவிற்கோ அல்லது ஜம்இய்யா சார்ந்த நடவடிக்கைகளு;ககோ அது சொந்தமானதல்ல என்பதையும் ஜம்இய்யா பொறுப்புடன் கூறிக்கொள்கின்றது.
எனவே எவ்வித உண்மையும் இல்லாத இனக் குரோதங்களை தூண்டி விடக் கூடிய பொய்யான பிரசாரங்களை செய்து இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்காமல் நடந்து கொள்ளுமாறு ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர்
உதவிச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
17.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பண்டாரவளை மக்தப் முஅல்லிம்கள், பண்டாரவளை கிளை உறுப்பினர்கள், உலமாக்களுடனான கலந்துரையாடல் ஒன்று பண்டாரவளை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மக்தப் பாடத்திட்டத்தின் வளர்ச்சி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு 17.11.2018 அன்று குருதலாவ ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்தப் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி வாசல் நிருவாகிகள் மற்றும் நலன்விரும்பிகள் என சுமார் 375 பேர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா