அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான பொதுக்கூட்டம் கடந்த 2022.06.18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு கண்டி கட்டுகலை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.
புர்கானிய்யா அரபுக் கல்லூரியின் உஸ்தாத் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இககூட்டத்தில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் கே.எம். அப்துர் ரஹ்மான் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் கடந்த மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களால் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் தலைமை உரை ஜம்இய்யாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாப்பு திருத்தத்தங்களுக்கான அங்கீகாரம் பெறும் நிகழ்வு நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் மற்றும் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
பின்னர் ஜம்இய்யாவின் அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ சாப்ட்வெயார் (மென்பொருள்) அறிமுகம் (http://membership.acju.lk/) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்களால் நடாத்தப்பட்டதோடு, தற்கால சூல்நிலையை கருத்திற் கொண்டு பின்வரும் தலைப்புக்களை உள்ளடக்கிய ஒரு பிரகடனம் (https://acju.lk/news-ta/acju-news-ta/item/2603-pirakadanam-tam) நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் சமூக சேவைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களால் வாசிக்கப்பட்டது:
01. சமூக ஒற்றுமை
02. சகவாழ்வு
03. இளைஞர்கள்
04. பொருளாதார நெருக்கடி
அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மொழியிலான அல்-குர்ஆன் ஜுஸ்உ அம்ம விளக்கவுரை வெளியிடப்பட்டதோடு, அதன் அறிமுகம் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் பத்வாக் குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் பிரதிகள் ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் பின்வரும் மூத்த உலமாக்களுக்கு வழங்கப்பட்டன:
01. அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். ஹாஜா முஹ்யுத்தீன் ஹழ்ரத்
02. அஷ்-ஷைக் அப்துல் காதர் ஹழ்ரத்
03. அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
04. அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத்
இறுதியாக நன்றியுரை உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களால் நடாத்தப்பட்டதோடு, அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத் அவர்களின் துஆ, ஸலவாத் மற்றும் கப்பாரத்துல் மஜ்லிஸுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா