2021.02.04
நம் தாய் நாடான இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். என்றாலும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பெரும் சவாலாக காணப்படும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 73வது சுதந்திர தினத்தை அடைந்துள்ள நாம் இத்தினத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் நினைவுகூறுவது அவசியமாகும்.
இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன, மத பேதங்களுக்கு அப்பால் நம் மூதாதையர் உழைத்தனர். பேதங்களின்றி ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதும் அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுபட்டு பெற்றுத் தந்த இந்த சுதந்திர நாட்டில் வன்செயல்கள் நிகழ்வதையும் மத நிந்தனை இடம்பெறுவதையும் இந்நாட்டின் எந்தப் பிரஜையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனை அனுமதிக்கவும் மாட்டார்கள். இந்நாட்டு பிரஜைகளாகிய நாம் இச்சுதந்திரத்தின் அர்த்தத்தை உண்மைப்படுத்தும் வகையில் ஒன்றுபட்டு ஐக்கியத்துடனும் புரிந்துனர்வுடனும் நாட்டின் அபிவிருத்திற்கு பணியாற்ற முன்வர வேண்டும்.
நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழவும் நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்படவும் சகல வளமும் பெற்று சுதந்திர தேசமாக இலங்கை மிளிரவும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலிலிருந்து நாடு விரைவாக மீட்சி பெற்றிடவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா