08.06.2019
ஊடக அறிக்கை
தற்போது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கடந்த 05.06.2019 ஆம் திகதி நடைபெற்ற மகா சங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, முஸ்லிம் மக்களுடன் எமக்கு எவ்வித எதிர்ப்பும், குரோதமும் வைராக்கியமும் இல்லை, நாம் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க விடயமாகும்.
இந்நாட்டின் சமாதானத்திற்காகவும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்காகவும் வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினர் மேற்கொண்டுவந்துள்ள பங்களிப்பு மெச்சத்தக்கதாகும். எமது தாய் நாட்டின் ஒற்றுமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் இணைந்து செயற்பட முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் அன்றுபோல் என்றும் தயாராக இருப்பதை இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் போன்ற எமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும் தீய சக்திகள் எவ்வடிவில் வந்தாலும் அதனை நாம் அனைவரும் இன, மத பேதமின்றி இலங்கையர்களாக ஒரே அணியில் நின்று எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்நாட்டில் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிதலையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா