ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம்

ஆக 24, 2024

2024.08.23 ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்டட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய குறித்த சந்திப்பிற்கான நேரம் வழங்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர்கள் உப செயலாளர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான அல்-ஹாஜ் முஜிபுர் ரஹ்மான், அல்-ஹாஜ் எஸ்.எம். மரிக்கார் ஆகியோருடன் சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வருகை தந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகமும் அதனால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற, எல்லா காலங்களிலும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழ்வோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் எம்மை எல்லாக் காலங்களிலும் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், சீ.ஜீ. வீரமந்திரீ அவர்கள் எழுதிய 'Islamic Jurisprudence: An International Perspective' மற்றும் லோனா தேவராஜா அவர்கள் எழுதிய 'The Muslims of Sri lanka - Thousand Year of ethnic Harmony' ஆகிய நூல்களை வாசிப்பதோடு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'විවෘත දෑසින් ඉස්ලාම්', 'සමාජ සංවාද', 'Don't be extreme', 'மன்ஹஜ்' (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) ஆகிய நூல்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் படிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்கள்.

அத்தோடு பலஸ்தீன மக்கள் உட்பட சகல மக்களும் சுபிட்சமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக வேண்டும் என பிரார்த்தித்ததோடு மேலும் பல விடயங்களையும் தலைவர் அவர்கள் முன்வைத்தார்கள்.

அத்துடன், வாக்களிப்பு என்பது ஓர் அமானிதமாகும். இவ்விடயத்தில் வாக்களிப்பவரும் வாக்களிக்கப்படுபவரும் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படக் கடமைப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் நினைவுபடுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் உரையாற்றுகையில், தனது அரசியல் கோட்பாடுகளையும் மேற்கொண்ட சமூகப் பணிகள் பற்றியும் விளக்கியதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ளும் சகவாழ்வுத் திட்டத்தினையும் சகவாழ்வு மையங்களையும் பாராட்டி, இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

 

 

- ACJU Media -

Last modified onசெவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2024 01:44

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.