ACJU/NGS/2022/244
2022.07.28 (1443.12.28)
பாஅலவிய்யா தரீக்காவின் ஆன்மீக வழிகாட்டியாகவும், சர்வதேச மட்டத்தில் முன்னோடியாகவும் வாழ்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் தஃவாப் பணிகளை செய்த கலாநிதி அஷ்ஷைக் அபூபக்ர் அல்அத்னி அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார் 2022.07.27 அன்று ஜோர்தான் நாட்டில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் யமன் நாட்டின் அஹ்வர் என்ற பிரதேசத்தில் முப்தியாக திகழ்ந்த அலி அல் மஷ்ஹுர் பாஅலவி (றஹ்) அவர்களின் புதல்வராக ஹிஜ்ரி 1366 யில் பிறந்து தனது தந்தையிடமும், அத்ன், தரீம், ஹழ்ரமௌத் போன்ற பிரதேசத்தின் ஏனைய உலமாக்களிடமும் மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் யமன் நாட்டின் அத்ன் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்கள். சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் அன்னார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.
அஷ்ஷைக் அபூபக்ர் அல்அத்னி பின் அலி அல்மஷ்ஹூர் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் முஸ்லிம் சமூகம் நவீன காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வரையறைக்குள் எவ்வாறு தீர்வுகாண்பது என்ற விடயத்தை பல தசாப்தங்களாக ஆய்வு செய்து, ஹதீஸ் ஜிப்ரீலின் அடிப்படையில் 'ஃபிக்ஹுத் தஹவ்வுலாத்' என்ற புதியதொரு துறையில் கியாம நாளின் அடையாளங்களையம், சமகால பிரச்சினைகளையும் மிக ஆழமாக ஆராய்ந்து பல நூற்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் அறிவுத் துறைக்கு நூற்றுக் கணக்கான நூற்களின் மூலம் பங்களிப்பு செய்ததைப் போல் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உலகின் பலநாடுகளில் நிறுவி தனது ஏற்பாட்டில் தனது மாணவர்களை இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் மார்க்கப் பணிக்காக அனுப்பி வைத்தார்கள். நடுநிலைமைப் போக்கை தனது நிiலைப்பாடாகக் கொண்ட அன்னார் இலங்கையிலுள்ள தரீக்கா மற்றும் தரீக்கா சாராத அரபுக் கலாசாலைகள் மற்றும் பள்ளிவாயல்களில் தனது தஃவாப் பணிகளை செய்து வந்தார்கள். அஷ்ஷைக் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் அலவிய்யத்துல் காதிரி (றஹ்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் கெச்சிமலை புகாரி மஜ்லிஸ், அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரி மற்றும் அலவிய்யா தரீக்காவின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்று அவர்களும் அவர்களின் மாணவர்களும் தொடர்ந்து பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், முஹிப்பீன்கள், முரீதீன்கள்; மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா