சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்

செப் 21, 2017

ACJU/NGS/09-17/002

21.09.2017/ 29.12.1438

சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்

புனித இஸ்லாம் இன, மத பேதமின்றி அனைத்து உயிர்களையும் சமமாக  மதிக்கின்றது. எந்தவோர் உயிரும் அநியாயமாகக் கொலை செய்யப்பட அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரை அநியாயமாகக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்த குற்றத்துக்கு சமம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ரோஹிங்ய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அநியாயமாக அவர்கள் கொன்றுகுவிக் கப்படுவதை முழு உலகமும் கண்டிக்கின்றது. நமது நாட்டு மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தமது கண்டனங்களைத் வெளியிட்டு வருகின்றனர்.

அல்லாஹுதஆலாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட  முஸ்லிம்களாகிய நாம் சோதனைகள், கஷ்டங்கள் வருகின்றபோது நமது பாவங்களிலிருந்து தௌபா செய்து மீளுதல், அவன் பக்கம் நெருங்குதல், அதிகதிகம் துஆ செய்தல் ஆகிய ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுவதுடன் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதிலும் அவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தங்களை உருவாக்குவதிலும் முன்னிற்க வேண்டும். இதுவல்லாமல் பெரும்பான்மையாக பௌத்த மக்கள் வாழ்ந்து வரும் நமது நாட்டில் அவர்களது பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் வண்ணம் செயற்படுவது ஆரோக்கியமாகாது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடயமாக ஆரம்ப கட்டத்திலேயே அந்நாட்டுத் தூதுவராலயம், ஐ.நா சபை இலங்கை ஜனாதிபதி முதலிய சகல தரப்பினருக்கும் கண்டனக் கடிதங்களை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜம்இய்யா வேண்டிக் கொண்டது.

ஏதாவதொரு விடயத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஷரீஆவின் வழிகாட்டலையும் ஜம்இய்யா வெளியிட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

எனவே குறித்த பிரச்சினையில் மிகவும் நிதானமாகவும், நாட்டு நிலமைகளைக் கவனத்திற் கொண்டும் நடந்து கொள்ளுமாறு தனது மாவட்ட பிரதேசக் கிளைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/826-2016-08-08-07-48-04

Last modified onவியாழக் கிழமை, 21 செப்டம்பர் 2017 10:05

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.