மார்ச் 17,18,19 - இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
ஷஃபான் மாதத்தின் அய்யாமுல் பீழ் நோன்பு
நாம் இப்போது ஷஃபான் மாதத்தின் 'அய்யாமுல் பீழ்' (வெள்ளை நாட்களை) எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். 'அய்யாமுல் பீழ்' (வெள்ளை நாட்கள்) என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் 13, 14 மற்றும் 15 வது நாட்களாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும் குறிப்பாக அய்யாமுல் பீழ் நாட்களில் நோன்பு நோற்குமாறும் ஊக்குவித்துள்ளார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் கூறுகின்றார்கள். 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது அந்த வருடம் முழுவதும் நோன்பு வைத்திருப்பதற்கு சமமாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி - 1979)
ஹழ்ரத் அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். 'நீங்கள் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீர்களானால் பதின்மூன்றாவது, பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நாட்களில் நோன்பு நோறுங்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அத்-திர்மிதீ - 761)