2021.03.16 (1442.08.02)

மூத்த ஆலிம்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டம் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு அண்மையில் ஆரம்பித்து வைத்தது. தக்ரீமுல் உலமா எனும் மகுடத்தின் கீழ் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 2021.03.16 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


அஷ்ஷைக் எம்.ஏ.எம். அர்ஷத் அவர்களின் கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சித் திட்டம் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்கள்,
'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் உங்களைப் போன்ற மூத்த ஆலிம்களின் அயாராத உழைப்பும் நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகளும் கனதியானவை. அவற்றை கருத்திற் கொண்டு அரபு மத்ரஸாக்கள், மஸ்ஜித்கள் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸாக்களில் நீண்ட காலமாக சன்மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த மூத்த ஆலிம்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தனவந்தர்களுடன் கலந்துரையாடினோம். அதன் பிரகாரம் முதற் கட்டமாக ஐம்பது ஆலிம்களுக்கு மாதாந்த உதவித் தொகை ஒன்றினை வழங்குவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப் பெற்றது.


இத்திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை தெரிவு செய்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினூடாக விண்ணப்பங்களையும் பகிர்ந்து கொடுத்தோம். பூர்த்தி செய்யப்பட்ட குறித்த விண்ணப்பப் படிவங்கள் குறிக்கப்பட்ட திகதிக்குள் ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையிலும் குறித்த ஆலிம்களின் சேவைகள், குடும்ப நிலை, வருமானம், மருந்துச் செலவினம்... முதலான விடயங்களைக் கவனத்திற் கொண்டு முதற் கட்ட உதவித் திட்டத்திற்காக ஐம்பது மூத்த ஆலிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உதவித் திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வே இது. மேலும் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றபோது இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகுதியான ஆலிம்களை கட்டம் கட்டமாக உள்வாங்கும் முயற்சி தொடரும், இன்ஷா அல்லாஹ்' எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள், ஜம்இய்யத்துல் உலமாவின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட, அதன் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த ஆலிம்கள் அனைவரையும் நினைவுகூர்ந்ததோடு குறிப்பாக ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களையும் நினைவுகூர்ந்தவாறு தனதுரையை ஆரம்பித்தார். தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர் தனது உரையில்,
'இந்நாட்டு மக்கள் பல்வேறு இடர்கள், சோதனைகள், துன்பியல் நிகழ்வுகளை எதிர்கொண்டபோது மனிதநேயப் பணிகளில் முன்னின்று உழைத்த அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
கனி தருக்கின்ற மரத்துக்கு கல் எறியப்படுவது போல இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பல பக்க விமர்சனங்களுக்குட்பட்டுள்ளதை சகலரும் அறிவர்.
இன்று முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் குறிப்பாக ஜம்இய்யதுல் உலமாவை முன்னிறுத்தியும் பல முனைகளிலிருந்து விரல்கள் நீட்டப்படுகின்றன. எனினும், அல்லாஹுத் தஆலா எம்முடன் இருக்கின்றான் என்பதே எமது நம்பிக்கையாகும்.


வீதியில் இறங்கி குரல் கொடுப்பது எமது முன்னோர் காட்டித் தந்த வழிமுறையல்ல. ஜம்இய்யத்துல் உலமா தனி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் சொந்தமானது. அந்த வகையில் கால சூழலைக் கவனத்திற்கொண்டு தேவைகளுக்கேற்ப துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி அதன் பிரகாரமே இயங்கி வருகின்ற ஒரு நிறுவனமே ஜம்இய்யத்துல் உலமா.
நாம் எமது தாய்நாடான இலங்கையை நேசிக்கின்றோம். அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம். நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படுவது கட்டாயமானது. ஒவ்வொருவரும் தத்தமது பிரதேசங்களிலுள்ள சகோதர இன மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுடன் நேசம் பாராட்ட வேண்டுமென மார்க்கம் வலியுறுத்துகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் நல்லவர்கள். வெகு சிலரே இனவாதத்துடன் செயல்படுகிறார்கள். எனவே, அந்த பெரும்பாலானவர்களுடன் நல்லுறவு பேணி நடந்து கொள்வது அவசியம். இவ்விடயம் பற்றியெல்லாம் உங்களது பிரதேசத்திலுள்ள ஆலிம்களுக்கு தெளிவூட்டுவது உங்களது பொறுப்பு' எனத் தெரிவித்தார்.

 

நிகழ்வில் பங்கேற்ற மூத்த ஆலிம்களுள் அஷ்ஷைக் அப்துல் ஜப்பார், அஷ்ஷைக் எம். ஹஸ்புல்லாஹ் பஹ்ஜி, அஷ்ஷைக் எம். மர்ஜான் மற்றும் அஷ்ஷைக் எம். கலீல் ஆகியோர் குறித்த நிகழ்வு பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

 

நிகழ்ச்சியின் பிரதான அம்சமான மூத்த ஆலிம்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சமுகமளித்த மூத்த ஆலிம்களுக்கான அடையாள காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களின் நன்றியுரையுடனும் துஆவுடனும் நிகழ்வு நிறைவுற்றது.

 

                      


30.12.2020

நாளை (31.12.2020 அன்று) கொழும்பில் ஊவுது அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாம் அழைக்கப்பட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.


என்றாலும் பின்விளைவுகளையும், சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற் கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை ஜம்இய்யா தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகக் கருதவில்லை. எனவே, ஊவுது அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலந்து கொள்வதில்லை என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாலித்து நிலைமைகளை சீராக்கித் தருவானாக.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நம் மக்களின் பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்று பிரார்த்திப்போம். அத்துடன் துஆ, இஸ்திஃபார், ஸதகா போன்ற நல்லமல்களில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்.

 


09.11.2020 (22.03.1442)

 

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.


அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:


1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்பினருக்கு உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அமுல் படுத்த வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.


3. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.


4. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.


5. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை விடப்பட்டது.


6. 22.06.2020 ஜனஸா அடக்கம், தகனம் தொடர்பிலான மார்க்கத் தெளிவு கொடுக்கப்பட்டது.


7. 05.07.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை நாம் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.


ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள், பாராளுமன்றம் செல்ல முன்பிருந்தே இதற்கான பூரண முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதைப் போன்று இன்றும் அமைச்சரவையில் பிரதான இடம் வகிக்கும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து ஈடுபாடு காண்பித்து வருகிறார் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.


சுகாதார துறைசார்ந்தோர்கள் சிலரின் அச்சம் அல்லது சந்தேகமே அடக்கம் செய்யும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள தடையாக இருந்து வருகின்றது என்பதையும் இந்நிலைப்பாடு தொடர்பில் தனக்கு அதிருப்தி இருக்கின்றது என்பதையும் 2020.11.08 ஆந் திகதி கொழும்பு கொல்லுபிட்டி ஜும்ஆப்பள்ளியில் நடைபெற்ற விஸேட வைபவத்தின் போது, மிகத் தெளிவாக கருத்து தெரிவித்தார் என்பது யாவரும் அறிந்ததே.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வழிகாட்டலுக்கமைய மையவாடிகள், மண்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதனால், இன்று (2020.11.09) குப்பியாவத்த மையவாடியில் மண்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; அது தொடர்பான அறிக்கையை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

ACJU/FRL/2020/21-238
2020.11.05

1442.03.17

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19


இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.


நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 


2020.11.05 (1442.03.17)


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.


இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)


2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)


3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)


4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )

 

5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.

 

6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)


அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:

"‏ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏"‏


(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)

 

7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்

Ref: ACJU/GEN/2020/025

10.09.2020/21.01.1442

நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக

 

2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்  எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகின்றோம். 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் கௌரவ முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும், அமைச்சருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது. இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித்தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதில் பொறுப்புக்கள் இஸ்லாமியப் பார்வையில் அமானிதமானதாகும் என்பதை நினைவுபடுத்தியதுடன், எமது மூதாதயர்களான பதீயுதீன் மஹ்மூத் போன்றவர்களின் சேவைகளை போன்று வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.


தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவரின் உரை இடம் பெற்றது. இதன் போது தங்களை போன்ற ஒருவருக்கு இவ்வாறானதொரு அமைச்சு வழங்கப்பட்டதையிட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்தும் முன்மாதிரிமிக்க முறையில் முன்னோக்கி செல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

தலைவரின் உரையை தொடர்ந்து கௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் உரையாற்றினார்கள். அதில் தமக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், நாட்டை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்கள் கைகொடுத்து செயற்பட வேண்டும் என்பதாவும் குறிப்பிட்டார்.

இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் பொருளாலர் அஷ்-ஷைக் எ.எல்.எம் கலீல் அவர்கள் பிராத்தனையுடன் நன்றியுரையை நிகழ்த்தி நிகழ்வை நிறைவு செய்தார். இந்நிகழ்வு 05.09.2020 அன்று இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா