மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!

அக் 11, 2016

11.10.2016 (09.01.1438) 

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!


இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.
அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்லாம்.
தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :


(اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٍ، عاجِلاً غَيْرَ آجِلٍ" - رواه أبو داود ((1169"
(اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - " رواه مسلم (897"
(اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت - "رواه أبو داود (1176"

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 12 அக்டோபர் 2016 06:33

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.