ACJU/NGS/2023/088
2023.02.15 (1444.07.23)
குருணாகல மாவட்டம், குரீகொட்டுவ பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.ஸீ. இஸ்ஹாக் லெப்பே (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்னார் 2023.02.14 ஆம் திகதி இரவு வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயின்று பட்டம் பெற்ற அன்னார் 1964 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – குருணாகல மாவட்டக் கிளையின் செயலாளராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் குருணாகல மாவட்டக் கிளையின் உப தலைவராகவும் சுமார் 05 தசாப்தங்களுக்கும் மேலாக ஜம்இய்யாவினூடாக இந்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக குருணாகல மாவட்ட மக்களுக்கும் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார்கள். சமூக விடயங்களில் முன்னின்று செயற்படக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராக திகழ்ந்த அன்னார் சிரேஷ்ட ஆசிரியராகவும், குளியாப்பிட்டிய பிரதேசத்தின் காழி நீதிபதியாகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா