பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜம்இய்யா தமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கின்றது

ஆக 29, 2022

ACJU/NGS/2022/335

2022.08.30 (1444.02.01)


பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமெய்திய மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவருக்காகவும் துஆச் செய்கின்றது.


பாக்கிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களினூடாக அறியக் கிடைக்கின்றது. இதனையிட்டு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, அந்நாட்டு மக்களுக்காகவும் குறித்த பேரழிவினால் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு அவசரமாக மீண்டு வருவதற்காகவும் துஆச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.


மேலும் இவ்வாறான சூழ்நிலைகளில் இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய மனிதநேயப் பண்பாடுகளை அடிப்படையாக வைத்து எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்குச் செய்யுமாறும் அவ்வாறு உதவிகளை செய்ய முன்வருபவர்கள் பாக்கிஸ்தானிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை மேற்கொள்ளுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.


எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எம்மனைவரையும் திடீர் மரணத்தை விட்டும் தாங்க முடியாத சோதனைகள் ஏற்படுவதை விட்டும் பாதுகாத்தருள்வானாக.

 


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்                                                                       முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி
பொதுச் செயலாளர்                                                                                           கௌரவத் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா                                                           அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onசெவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2022 08:30

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.