ACJU/NGS/2022/214
2022.07.10 (1443.12.10)
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஹுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொளகின்றது.
நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமுஸ்ஸலாம்) தியாகங்களை நினைவு படுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது.
பொருளாதார ரீதியில் நம்நாடு பல நெருக்கடிகளை சந்தித்துள்ள ஒரு சூழலில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை நாம் அடைந்திருக்கிறோம். இந்நெருக்கடியான காலத்தில் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை அர்ப்பணித்து மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா மற்றும் ஏனைய அமல்களை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதே நேரம் தியாகத் திருநாள் கற்றுத் தரும் தியாக மனப்பாங்கை எம்மில் வளர்த்தல், மார்க்க விடயங்களில் பேணுதலாக இருத்தல், ஏனையோருக்கு உதவிகள் செய்தல், அனைவருடனும் அன்பாகப் பழகுதல், சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளல் போன்ற நல்ல பண்புகளையும் எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணை புரியவும், இம்மாதம் கற்றுத்தரும் தியாக உணர்வை பாடமாகக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு நாம் முன்மாதிரியாக செயற்படவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை அவசரமாக நீங்கி சுபீட்சம் ஏற்படவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! ஈத் முபாரக்!
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா