Fatwa

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் வியாபாரத்தை ஆரம்பித்து ஒரு வருடம் (சந்திர வருடம்) பூர்த்தியாகும் நேரத்தில், அவரது வியாபராப் பொருட்கள், பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால் அவர் ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவர் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொழுது ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரி. கடலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம், போன்ற சிறு வியாபாரங்களிலும் மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் இருந்தாலே அன்றி ஸகாத் கடமையாகாது. 

கிடைக்கப்பெறும் வருமானம் செலவழிந்து விட்டால், அதை ஸக்காத் கணக்குப் பார்க்கும் பொழுது சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) 85 கிராம் தங்கம் அல்லது 595 கிராம் வெள்ளியின் பெருமதியாகும். இலங்கை நாணயத்தில் 09.04.2015 ஆந் திகதியின் பிரகாரம் ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) தங்கத்தின் பெருமதியில் ரூபாய் 481,312.50 உம், வெள்ளியின் பெருமதியில் ரூபாய் 56,525.00 உம் ஆகும். தங்கம் வெள்ளியின் விலை நாளுக்கு நான் வித்தியாசப்டுவதனால் ஸகாத் கடமையாகுவதின் ஆகக் குறைந்த நிலையில் வித்தியாசம் ஏற்படலாம். ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்கும் பொழுது தனக்கு ஸகாத் கடமையாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட தினத்தின் தங்கம் வெள்ளியின் விலையை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏழைகளின் நலவுகளைக் கவனித்து வெள்ளியுடைய நிசாபை அடிப்படையாக வைத்து ஸக்காத்தை நிறைவேற்றிக்கொள்வது சிறந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

இடங்களில் சிறந்த இடமாகிய அல்லாஹ்வின் மாளிகையில், அதான் கூறும் முஅத்தின்கள் மற்றும் ஏனைய சேவைகளில் ஈடுபடும் ஊளியர்கள், அதிகாரிகள் போன்ற அனைவரினதும் சேவைகள் அளப்பரியது. குறிப்பாக, முஅத்தின்களது சிறப்புகள் விடயத்தில் பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

'ஒரு முஅத்தினுடைய சப்தம் செல்லும் அளவு தூரம் அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது, மேலும், அவருக்குக் காய்ந்த, ஈரமான ஒவ்வொரு வஸ்துக்களும் பாவமன்னிப்புத் தேடுகின்றது'  என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறியதாக அபூ ஹுரைராஹ் (றழி) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ் இப்னு மாஜாஹ் எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களது சேவைகளுக்கான போதியளவு சம்பளத்தை வழங்குவதற்கான ஒழுங்குகளைக் குறித்த நிர்வாகம்; செய்தல் வேண்டும்.

ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:                              

'(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் ஸகாத் பணியிலீடுபடும் இஸ்லாமிய அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)

முஅத்தின் அதிகாரிகளுக்கு ஸக்காத்தில் குறிப்பாக ஒரு பங்கு குறிப்பிடப்படவில்லை. அவர்கள் மேற்கூறப்பட்ட, அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் கூறும், ஸக்காத் பெறத் தகுதியான பிரிவினர்களில் பரம ஏழை, ஏழை, கடனில் மூழ்கியவர்கள் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் கொடுக்கலாம்.

ஸகாத் எடுக்கத் தகுதியான முஅத்தின் அதிகாரிகளை இனம் கண்டு நேரடியாக ஸகாத்தை கொடுப்பது சிறந்தது. முஅத்தின் அதிகாரிகளின் நலன்களில் ஈடுபடும் சங்கங்கள், சம்மேளனங்கள் போன்ற அமைப்புக்களுக்கும் அவர்கள் முறையாக ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்குக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் ஒப்படைக்கலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

பள்ளிவாசலில் தூண்களுக்கு மத்தியில் சிறிய அளவில் கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது சம்பந்தமாக

குறிப்பிட்ட பள்ளிவாசலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவில் சிலர் 22.11.2015 அன்று நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதுவிடயமாக 16.12.2015 அன்று நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்தில் அக்குழுவினர் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பிட்ட பள்ளிவாசலில் தூண்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது பள்ளிவாசலில் நடைபெறும் அமல்களுக்குத் தடையாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதனால் இக்கட்டுக்கள் ஷரீஆவிற்கு முரணாக இருப்பதாகத் தெரியவில்லை.

குத்பாப் பேருரையை இமாம் அல்லாத மாடியில் அகலத் திரையில் காண்பித்தல்.

குத்பாப் பேருரையை கதீப் உரையாற்றும் மாடியல்லாத ஏனைய மாடிகளில் அகலத்திரை மூலம் உரையைக் காண்பிப்பது பற்றி தற்கால மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

குத்பாப் பேருரையை செவிமடுப்பதற்காக மஸ்ஜிதிற்கு சமுகமளிக்கும் சிறார்கள் உட்பட அனைவர்களது கவனத்தையும் உரையின் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு அகலத் திரையில் குத்பா உரை நிகழ்த்துவதைக் காண்பிப்பதனால் ஜுமுஆவின் பயன் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இவ்வாறு காட்சிப்படுத்தவது ஆகும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

என்றாலும், பல அறிஞர்கள் பின்வரும் பல காரணங்களை வைத்து அவ்வாறு அகலத் திரையில் காண்பிப்பது கூடாது என்று கூறுகின்றனர்.

  1. ஜுமுஆவின் தொழுகையையும், பேருரையையும் அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் 'திக்ருல்லாஹ்' அல்லாஹ்வை ஞாபகம் செய்தல் என்று குறிப்பிட்டுள்ளான்.

'يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ' (الجمعة-9)

'ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, 'அல்லாஹ்வை ஞாபகம் செய்ய' (மஸ்ஜிதுக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்' (அல்-ஜுமுஆ – 09)

எனவே, காலாகாலம் நாம் குத்பாப் பிரசங்கத்திற்குக் கொடுத்து வந்த கௌரவமும், மகிமையும் குறைந்துவிடலாம் அல்லது இழந்து விடலாம்.

  1. திரையில் ஜுமுஆ நடைபெறும் பொழுது ஹதீஸில் வலியுறுத்தப்படட்டுள்ள இமாமுக்கு அருகாமையில் உட்காருவதை விட்டுவிட்டு மக்கள் அத்திரைக்கு அருகாமையில் உட்கார ஆரம்பித்து விடலாம்.
  2. திரையில் காண்பிப்பதற்கு இருள் அவசியம் என்பனால் மஸ்ஜிதை இருளாக்குவதற்கும், தொழில் நுட்;பக் கோளாறுகள் ஏற்படும் பொழுது அதை சரிசெய்வதற்கும் மனிதர்களின் நடமாட்டம் இடம்பெறும். இதனால் ஜுமுஆவிற்குத் தேவையான அமைதி நிலை இல்லாமற் போகும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'யார் ஜுமுஆவின் பொழுது கற்களைத் தொடுகிறாரோ அவரது ஜுமுஆ வீணாகிவிடும்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் எண் : 869 )

எனவே, இது போன்ற இன்னும் பல பின் விளைவுகளை வைத்து மஸ்ஜிதில் ஜுமுஆப் பேருரைகளைத் திரையில் காண்பிப்பது கூடாது என்று கூறும் மார்க்க அறிஞர்களின் கருத்தை ஏற்றமானதாகவும், பேணுதல் உள்ளதாகவும்; கருதுகிறோம். மேற்கண்ட விடயங்களை கவனத்திற் கொண்டே தீர்ப்புகள் பெறப்படவேண்டும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறிக்கொள்ள விரும்புகிறது.

சிறார்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவர்களது தந்தையர்கள், பாதுகாவளர்களுடன் ஒன்றாக உட்கார வைப்பது போன்ற வேறு உத்திகளைக் கையாளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:

வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே' எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான். (2:275)

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள். (2:278, 279)

அவ்வாறே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் பல்வேறு பொன்மொழிகள் வட்டியை ஹராம் என தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன.

அழிவை உண்டாக்கும் ஏழை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறிய போது, அவை எவை என தோழர்கள் வினவினர். அதற்கு நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆண்மாவை உரிமையின்றி கொலை செய்தல், வட்டி உண்ணல், அநாதையின் சொத்தை உண்ணல், யுத்த தினத்தில் புறமுதுகுகாட்டி ஓடுதல், விசுவாசிகளான பத்தினிப் பெண்களை அவதூறு கூறல் என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)

வட்டி 73 வாயல்களாகும். அவற்றில் மிக எளிதானது மனிதன் தன் தாயுடன் புணர்வதாகும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: முஸ்தத்ரக்குல் ஹாக்கிம்)

வட்டிக்கொடுமை முன்னைய வேதங்களிலும் தடுக்கப்பட்டிருந்தமை நோக்கற்பாலது. இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:

வட்டியை விட்டு அவர்கள் (யூதர்கள்) தடுக்கப்பட்டிருந்தும் ... (4:161)

நன்மையான காரியங்களைப் புரிவோருக்கு நன்மைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றைச் செய்வதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் நன்மைகளை வாக்களிக்கின்றது. அது போலவே தீய காரியங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றுக்குத் துணைபோவோருக்கும் தண்டனைகளை வாக்களிக்கின்றது. நன்மைக்குத் துணைபோவதும் நன்மையே. தீமைக்குத் துணைபோவதும் தீமையே.

மனிதனை அழித்துவிடும் மாபெரும் பாவங்களுள் ஒன்றான வட்டிக்கு வழங்கப்படும் தண்டனைகள் வட்டிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருடன் மாத்திரம் நின்று விடுவதில்லை. மாறாக அதனை எழுதுவோர், அதற்கு சாட்சிகளாக நிற்போர் போன்ற அனைவருக்கும் அத்தண்டனைகள் கிடைக்கவே செய்கின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகின்றது:

வட்டி உண்பவனையும், அதனை (பிறருக்கு) உண்ணக்கொடுப்பவனையும், அதனை எழுதுபவனையும், அதன் இரு சாட்சிகளையும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: சஹீஹு முஸ்லிம்)

இவ்வடிப்படையில் வட்டியை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளை உருவாக்குவதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியைத் தவிர்த்து, தகுந்த இஸ்லாமிய வங்கி முறைமைகளில் அனுபவமுள்ள மார்க்க அறிஞர்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய வங்கிகளை அல்லது பாரம்பரிய வங்கிகளின் இஸ்லாமிய வங்கிக் கிளையை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'ஸுன்னத்தான தொழுகை என்பது ஒரு சிறந்த அமலாகும். விரும்பியவர் அதிகமாகவும் விரும்பியவர் குறைவாகவும் தொழலாம்' என்ற அஹ்மத், தபரானி, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிக்கமைய ஸுன்னத்தான தொழுகைகளைத் தாம் விரும்பும் அளவு அதிகமாகத் தொழுவது நன்மையான காரியமாகும்.

குறிப்பாக வித்ரு, தஹஜ்ஜுத் போன்ற இரவு நேரத் தொழுகைகளைத் தொடர்ந்து தொழுவதை வழமையாக்கிக் கொள்வதன் சிறப்புக்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். அதேபோன்று சில நேரங்களில் சில ஸுன்னத்தான தொழுகைகளைக் கூட்டாகவும் தொழுதுள்ளார்கள்.

குறிப்பாக, இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண் பார்வையை இழந்த சமயம் ஜமாஅத்துடன் தொழுவதற்கு மஸ்ஜிதுக்கு செல்ல முடியாது என்பதனால், வீட்டில் தொழுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். அனுமதி வழங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களது வீட்டுக்கு சென்று, அவர் தொழும் இடத்தைக் கேட்டு, பரக்கத்துக்காக  

இரண்டு றக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுது ஆரம்பித்துவைத்தார்கள். இந்த ரிவாயத் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது.  அதே போன்று உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு இன்னும் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு அருந்த சென்ற சமயம் ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள். 

என்றாலும், ஸுன்னத்தான இரவுத் தொழுகைகளைக் கூட்டாகத்; தொழுவதற்கு மாதத்தில் பிரத்தியேகமாக ஒரு நாளை ஒதுக்கி, அந்நாளில் பொதுமக்களை ஒன்று சேர்த்து, தொடராகத் தொழும்  வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை. அல்லது செய்யும் படி ஆர்வமூட்டப்படவுமில்லை. மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுன்னத்தான காரியங்களில் தனக்கு முடியாதவைகளைச் சிரமப்பட்டு மேற்கொள்வதைத் தடுத்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை ஒரு பெண் இரவு முழுவதும் தூங்காமல் வணக்கத்தில் ஈடுபட்ட பொழுது,

'உங்களுக்கு முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ் சடைவடைய மாட்டான்.' (சஹீஹுல் புகாரி – 1151) என்று கூறினார்கள்.

எனவே, இதைத் தவிர்த்து, சுன்னத்தான தொழுகைகளின் சிறப்புக்களை மக்களுக்கு உணர்த்தித் தனியாக தமக்கு வசதியான இடங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டுதல் வேண்டும்.

சுன்னத்தான தொழுகைகளை வீடுகளில் தொழுதுகொள்ளும் படியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

'மக்களே உங்களது வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகைகளைத் தவிர்த்து ஏனைய தொழுகைகளில் வீட்டில் தொழப்படும் தொழுகையே சிறந்ததாகும்.' நூல்: சஹீஹுல் புகாரி - 731

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் செய்வது சம்பந்தமாக இஸ்லாமிய வரையறைகள் பற்றி கடந்த 02.07.2014 நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலும், 20.11.2014 அன்று நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் விடயங்கள் முடிவு செய்யப்பட்டன.

எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.

பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.

ஏனெனில், ஆர்ப்பாட்டம் என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட, பொதுவான கோரிக்கைகளை ஜனநாயக நாடுகளில் வென்றெடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு யுக்தியாகும்.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதாயின், பின்வரும் விடயங்களைக் கவனிப்பது அவசியமாகும். 

  1. ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படக்கூடிய பிரயோசனங்களை விட அதனால் ஏற்படும் கெடுதிகள் அதிகமாக இல்லாதிருத்தல்.
  2. ஆர்ப்பாட்டத்தின் மூலம் உயிர்கள் மற்றும் உடமைகள் போன்றவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருத்தல்.
  3. ஆர்ப்பாட்டத்தின் மூலம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான தொழில், கல்வி, பயணம் போன்றவைகள் ஸ்தம்பிதம் ஆகாமலிருத்தல்.
  4. ஆர்பாட்டத்தின் மூலம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருத்தல்.
  5. ஆர்ப்பாட்டத்தின் போது, பொது தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழையாதிருத்தல்.
  6. ஆர்ப்பாட்டம் செய்வதற்கு விருப்பமில்லாதவர்களை ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைக்கும்படி வற்புறுத்தாமல் இருத்தல்.
  7. ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்முறைகள் உருவாகி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருத்தல்.
  8. சில குறிப்பிட்ட நபர்களின் சொந்த இலாபங்கள், மறைமுகமான நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
  9. பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருத்தல்.
  10. கொடும்பாவி எரித்தல் போன்ற சன்மார்க்கத்திற்கு முரணான விடயங்களைத் தவிர்த்தல்.
  11. ஆர்ப்பாட்டம் ஊருடைய பொது விடயம் சம்பந்தமாக இருந்தால், அவ்வூர் ஆலிம்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தல்.
  12. ஆர்ப்பாட்டத்திற்கென்று நாட்டில் உள்ள சட்டவரையறைகளை மீறாதிருத்தல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஒரு பொருளை ஏலம் முறையில் விற்பனை செய்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட முறைமைகளில் ஒன்றாகும். இதற்கு கீழ்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரிப்பொன்றையும் பாத்திரம் ஒன்றையும் விற்பதற்காக, இவற்றை யார் வாங்குவது என்று கேட்டார்கள். அதற்கு ஒரு மனிதர், நான் அவற்றை ஒரு திர்ஹத்திற்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் ஒரு திர்ஹத்தை விட அதிகமாக யார் எடுப்பது என்று கேட்டார்கள். இன்னுமொரு மனிதர் நான் இரண்டு திர்ஹங்களுக்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவருக்கு அவ்விரண்டையும் விற்றார்கள்.' (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல் : திர்மிதி)

மஸ்ஜிதுக்காக வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடாது. என்றாலும், இத்துப்போன பாய்போன்ற, பாவனைக்கு உதவாத வக்ப் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஸதகாவின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களாக இருந்தால் அவற்றை விற்பனை செய்யலாம். அதன் வருமானத்தை மீண்டும் மஸ்ஜிதின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.

ஏலம் செய்யும் பொழுது மஸ்ஜிதிற்குள் இல்லாமல், அதன் வெளி வளாகத்தில் அல்லது வேறு இடத்தில் வைத்துக்ககொள்ளல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகை, அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தும் ஓர் அமலாக இருப்பதால், அதை கடமை உணர்வுடனும், நன்மையை எதிர் பார்த்தும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையில் பயபக்தி மிக முக்கியமாகும். பயபக்தியற்ற தொழுகை குறைவுடைய தொழுகையாகும். தொழுகையில் உடல், உடை மற்றும் தொழும் இடம் ஆகிய அனைத்தும் தொழுகையை விட்டும் உள்ளத்தைத் திசைதிருப்பக் கூடியதாக இருக்கக்கூடாது. தொழுகையின் பொழுது பிற சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய, பார்வைகளைத் திருப்பக்கூடிய, கவனத்தை மாற்றக்கூடிய அனைத்து விடயங்களும் (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவைகளாகும். 

உள்ளச்சத்துடன் தொழுவது பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

' وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ '    (سورة البقرة : 238)

அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (அல் பகரா : 238)

'قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ'                                    (سورة المؤمنون : 1.2)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.' (அல் முஃமினூன் : 1,2)

பின்வரும் ஹதீஸும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.

عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلَامٌ، وَقَالَ: «شَغَلَتْنِي أَعْلَامُ هَذِهِ فَاذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ، وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ» (صحيح مسلم - 556)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடிந்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்து விட்டன. எனவே இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொடுத்து விட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் என்- 556)

ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள். 

தொழுகையில் உள்ளச்சத்தை நீக்கக்கூடியவைகளின் மீதோ அல்லது உருவம் மற்றும் சிலுவைகள் வரையப்பட்டுள்ள துணிகளின் மீதோ, அவற்றை நோக்கியோ அல்லது அவற்றை அணிந்துகொண்டோ தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்க விடயமாகும். (அல்-மஜ்மூஃ)

ஹனபி, மாலிகி மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சார்ந்த அறிஞர்களின் கருத்துக்களும் இதுவேயாகும். என்றாலும் ஹன்பலி மத்ஹபின் இன்னுமொரு கருத்தின்படி இவ்வாறு தொழுவது ஹராமாகும்.

ஆகவே, மஸ்ஜிதின் சுவர்கள், தூண்கள் மற்றும் விரிப்புகள் போன்றவற்றை தொழக்கூடியவர்களின் உள்ளச்சத்தை நீக்கக்கூடிய, அலங்காரங்கள் மற்றும் வரையப்பட்ட படங்களை விட்டும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் உங்களது கடிதத்தில்; தொழுகைக்காக விரிக்கப்படவுள்ள விரிப்பில் அலங்காரங்கள் இருப்பதால் அதில் தொழுவதற்கு அனுமதியுள்ளதா என்பதை நேரடியாக பார்வையிட்டு அதுபற்றி முடிவெடுக்குமாறு கேட்டிருந்தீர்கள். இந்த வேண்டுகோளுக்கேற்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவில் சிலர் தங்களது மஸ்ஜிதுக்கு நேரடியாக வந்து பார்வையிட்டதன் பின் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் மார்க்கத் தீர்ப்பை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

உங்களது மஸ்ஜிதில் தொழுகைக்காக விரிக்கப்படவுள்ள விரிப்பில் இருக்கும் அலங்கார வேலைப்பாடுகள் தொழுகையாளிகளின் கவனத்தை தொழுகையை விட்டும் திருப்பக்கூடியதாக இருக்கின்றது என்பதனால் அதில் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கதாகும்.

பொதுவாக மஸ்ஜித்களில் தொழுகைக்காக விரிக்கப்படும் விரிப்புகளில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள விரிப்புகளைத் தவிர்த்து, அலங்காரமற்ற விரிப்புகளைத் தெரிவு செய்து கொள்வது தொழுகையை உள்ளச்சத்துடன் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

இரண்டு வயதை அடையாத ஒரு குழந்தை தாய் அல்லாத ஒரு பெண்ணிடம் ஐந்து தடவைகள் பால் குடித்துவிட்டால் அக்குழந்தைக்கு அந்தப் பெண் பால் குடித்தாயாக மாறுவதுடன் அப்பெண்ணின் கணவன் பால் குடித் தகப்பனாகவும் அவ்விருவரின் பிள்ளைகள் பால் குடிச் சகோதரர்களாகவும் மாறிவிடுவாரகள்.

ஒரு தடவை குழந்தை பால் குடித்துவிட்டது என்பதை குழந்தை பால் குடித்துவிட்டு மார்பிலிருந்து தானாக, வாயை எடுத்துவிட்டால் அது ஒரு தடவையாக கணிக்கப்படும். இவ்வாறு ஐந்து தடவைகள் குழந்தை பால் குடித்துவிட்டால் மேற்கூறப்பட்ட அனைவரும், பால் குடி உறவுடையோராக மாறுவதுடன், அவர்களைத் திருமணம் முடிப்பதும் ஹராமாகிவிடும்.

இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் போன்ற சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்தாலும், அப்பால் குடி உறவுகள் மஹ்ரமாகுவதுடன், அவர்களைத் திருமனம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கேள்வியிலிருந்து விளங்கப்படுவதானது நீங்கள் உங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இரு தடவைகள் பால் குடித்துள்ளீர்கள் என்பதாகும்.

இதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடித்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால் குடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை  நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.

என்றாலும், நாம் மேற்கூறியது போன்று சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்து விட்டாலும் பால் குடி உறவு ஏற்பட்டு, திருமணம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளதனால், உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனைத் திருமணம் முடிக்காமல் இருப்பது மிகவும் பேணுதலாகும்.  மேலும், இதனால் பின்னால் ஏற்படும் பல அசௌகரியங்களை விட்டும் தவிர்ந்துகொள்ள முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

மஸ்ஜிதுக்குச் சொந்தமான வெற்றுக் காணியை மஸ்ஜித் நிர்வாகிகளின் அனுமதியுடன் சந்தை விலைக்கு தனிப்பட்ட ஒரு நபர் வாடகை செலுத்தி விவசாயம் செய்வதற்கு அனுமதியுண்டு. செலுத்தப்படும் வாடகையே மஸ்ஜிதுக்கு இலாபமாக அமையப்பெறும். வாடகைக்கு கொடுக்கப்படும் காலம் மூன்று அல்லது அதைவிடக் குறைவான காலமாக இருப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், இதனால் ஏற்படும் பல சட்டப்பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம்.